கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு
பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த “புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் தடுப்பு” (Cancer Early Detection & Prevention Programme) விழிப்புணர்வு செயலமர்வு கடந்த புதன்கிழமை (11) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் புற்றுநோய் பற்றிய அறிமுகமும் ஆபத்து காரணிகளும், வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவமும் வாய்ப்புற்றுநோயும், மார்பகப் புற்றுநோயும் சுய பரிசோதனையும் எனும் மிக முக்கிய மூன்று தலைப்புக்களில் துறைசார் வளவாளர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
கல்முனை பிராந்திய தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாத், பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.ஹபீப் முஹம்மட், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாத்திமா ஷாபிரா முகம்மட் வாசீம் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.கரண், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.ரமேஷ் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் உட்பட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணம் முழுவதும் புற்றுநோய் தொடர்பாக 100 விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தும் விசேட வேலைத்திட்டத்தை மாகாண சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ள நிலையில், அதன் 4வது நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
