அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!
அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜிநாமா செய்யுமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதியாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். இதன்மூலம், அந்நாட்டு சட்டங்களின்படி 4 ஆண்டுகளுக்கு அவர் ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவி வகிப்பார் எனக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், அமெரிக்க அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹெக்சத் கடந்த வியாழக்கிழமை (ஏப். 2) ராணுவத் தளபதி ராண்டி ஜார்ஜை பதவி விலக உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த இராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், தலைமைத் துணைத் தளபதி கிறிஸ்டோபர் சி. லானீவ் தற்காலிகமாக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பதவி வகிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அதிபா் டிரம்ப் நிா்வாகத்தில் அரசு தலைமை வழக்குரைஞராக (அட்டா்னி ஜெனரல்) இருந்த பாம் போண்டி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.