;
Athirady Tamil News

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; மக்களுக்கு வெளியான அறிவித்தல்

0

ஆறு மாவட்டங்களிலுள்ள 24 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (26) பிற்பகல் 04.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியாகலை, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட எச்சரிக்கை
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த இரண்டாம் கட்ட எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, மத்துகம, புளத்சிங்கள, அகலவத்தை, இங்கிரிய மற்றும் ஹொரணை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த மற்றும் கலவானை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.