;
Athirady Tamil News

ஈரான்: நகரங்களில் இன்னும் இருந்தால் செத்து மடிவோம்..! கிராமங்களுக்கு இடம்பெயரும் மக்கள்!

0

வெறிச்சோடிய வீதிகள்.. கரும்புகை மண்டலம்.. குண்டுவெடிப்புச் சத்தம்… ஈரானியத் தலைநகரான தெஹ்ரானின் இப்போதைய களநிலவரம் இதுதான்!

அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28-ஆம் தேதி கொல்லப்பட்டாா். தொடரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் நடவடிக்கை ஈரானில் மிகக் கடுமையன பாதிப்புகளை விளைவித்திருக்கிறது.

இரண்டாவது வாரமாக தொடரும் தாக்குதல்களால் தெஹ்ரான் நகரமே பற்றியெரிவது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மிகவும் மோசமான அசாதாரண சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, இன்னும் எத்தனை காலம் இந்தச் சண்டை நீடிக்கும் என்பதும் தெரியாத மனநிலையில் குழம்பிப் போயிருக்கும் அங்குள்ள ஆயிரக்கணக்கான ஈரானிய குடும்பங்கள், வீடுவாசல் துறந்து பாதுகாப்பு தேடி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கும் அப்பால், கிராமப் பகுதிகளுக்கும் சிறு நகரங்களுக்கும் இடம்பெயரத் தொடங்கிவிட்டனர்.

கையிருப்பிலுள்ள பணம் இன்னும் எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் உணவு கிடைக்கிறது. இயற்கையுடன் பொழுதைக் கழிக்கிறோம் என்று கிராமங்களில் தஞ்சமடைந்துள்ள நகரவாசிகள் தெரிவித்தனர்.

எங்களது ஒரே மகன் வெளியில் கேட்கும் குண்டு வெடிப்புச் சத்தம் வானில் பாயும் ஏவுகணைகளைக் கண்டு பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டான். அவமால் சரியாகத் தூங்கக்கூட முடியவில்லை. அவனது அச்சத்தைப் போக்க நானும் என் மனைவியும் படுக்கையில் எங்கள் இருவருக்கும் நடுவில் அவனை உறங்க வைக்கிறோம். ஆனாலும், பயத்தில் அவன் திடீரென எழுந்து அலறுவதௌப் பார்க்கும்போது… கண்ணீருடன் களச்சூழலை விவரித்தார் ஈரானிய தந்தையொருவர்!

முதுமைப் பருவத்திலுள்ள எமது பெற்றோர்களை இங்கிருந்து இடம்பெயர்ந்து அழைத்துச் செல்ல முடியாத நிலைமையில் என்ன செய்வதென தெரியாது பரிதவிக்கும் நான், என் மனவேதனையை வெளிப்படுத்த முடியாமல் இரவில் என் வீட்டில் எல்லோரும் உறங்கியதும் காருக்குள் சென்று கதவுகளைச் சாத்திக்கொண்டு கதறியழுவேன்.. என்று வேதனையைப் பதிவு செய்தார் இன்னொரு ஈரானியர்.

இதைத் தொடா்ந்து, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவது இல்லை எனவும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் சூளுரைத்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால், ஈரான் மீது இதுவரை தாக்கப்பட்டதைவிட 20 மடங்கு கடுமையாக தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஈரானின் மிக உயரிய அதிகாரமிக்க பதவியான ‘தலைமை மதகுரு’ பொறுப்புக்கு, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56) அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போரில் ஈடுபட்டுள்ள ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க நாடுகள் தங்கள் சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என போப் 14-ஆம் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளாா். சண்டை தொடங்கியது முதல் இதுவரை, பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ கடந்திருப்பதாகவும், சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனர் என்றும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஈரானின் புதிய தலைமை அமைதிக்கு வழிவகுக்குமா? என்பதே ஈரான் மக்களின் ஒரே கேள்வியாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.