அரசியல் களத்தில் ‘புரூஸ் லீ’ பாணியில்? – அமைச்சர் லால்காந்த!
— Nadarajah Kuruparan
லால்காந்த மட்டும் ‘புரூஸ் லீ’யாக மாறி பிரயோசனம் இல்லை. அநுரவும், ரில்வினும், ஹரினியும், JVPயும்’புரூஸ்லீகளாக வேண்டும்!
“அரசியல் எதிரிகள் எந்த ஆடையில் இருக்கிறார்கள் என்று நாங்கள் பார்க்க மாட்டோம். மோதுவதற்கு வந்தால் பதிலடி நிச்சயம்!” என்ற அமைச்சர் லால்காந்தவின் ஆவேச உரை மீண்டும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த, அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ள கருத்துகள் பலமான விவாதங்களை உரவாக்கியுள்ளது.
அந்த வகையில், அரசாங்கம் சில நேரங்களில் மௌனமாக இருப்பது பயத்தினால் அல்ல, அது ஒரு வகையான நிதானம் மட்டுமே என்கிறார்.
நாடாளுமன்றில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஏன் சும்மா இருக்கிறீர்கள் என தமது ஆதரவாளர்களே கேட்கிறார்கள் எனக் கூறிய அவர், தாம் தாக்கும் போது அது புரூஸ் லீ (Bruce Lee) கொடுக்கும் அடியைப் போல மின்னல் வேகத்தில் இருக்கும் என முழங்கியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு உள்ளாகிய பின், “நான் கறுப்பு அங்கி (சட்டத்தரணி) அணிந்திருக்கிறேன், நான் தேசிய உடை அணிந்திருக்கிறேன் அல்லது நான் காவி உடை அணிந்திருக்கிறேன்” என்று ஆடையைக் காட்டித் தப்பிக்க முடியாது. அரசியலுக்கு வந்துவிட்டால் தராதரமோ அல்லது அணிந்திருக்கும் ஆடையோ முக்கியமல்ல; அரசியல் ரீதியான மோதல்கள் சமமாகவே எதிர்கொள்ளப்படும் எனவும் லால்காந்த கூறியுள்ளார்.
குறிப்பாக அரசியல் ரீதியாகத் தங்களை விமர்சிப்பவர்கள், தங்களின் அடையாளங்களை கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை அமைச்சர் இவ்வாறு வெளிப்படையாகச் சாடியுள்ளார்.இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
77 வரடங்களின் பின் இலங்கையின் அரசியல் களத்தில், அணிந்திருக்கும் ஆடைகளோ, அவர்களின் அடையாளங்களோ முக்கியம் அல்ல அரசியலில் குதித்தால் காவியுடைக்குள் ஒழிந்துகொள்ளவோ, காவியை பாதுகாப்பு அரணாக பயன்படுத்தவோ முடியாது என அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் கூறியிருப்பது புதிய அரசியல் பயணத்தின் அறிகுறியாக கருத முடியும்
எனினும் புரூஸ் லீ (Bruce Lee) கொடுக்கும் அடியைப் போல மின்னல் வேகத்தில் இல்லாவிடினும், தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாகவேனும் நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், அல்லது சர்வதேச மனித உமைகள் அமைப்புகளின் விதிமுறைகளைப் பின்பற்றிய புதிய சட்டமூலத்தை உருவாக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் அரசாங்கம், அல்லது படையினர் கையகப்படுத்தி உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
புதிய அரசியல் யாப்பும், அரசியல் தீர்வும் இறுதிசெய்யப்படும் வரை மாகாண சபைப் தேர்தலை நடாத்தி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள முழுமையான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும்.
வட்க்கு கிழக்கில் தொடரும் காணி ஆக்கிரமிப்புகள், காணி அளவீடுகள், விஹாரைகளை கட்டுதல், புத்தர்சிலைகளை நிறுவதல் போன்ற முரணான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
லஞ்சம் ஊழல், அதிகாரத் துஸ்பிரயோகம், போதைமயவாக்கம் என்பவற்றில் இருந்து மட்டும் மீட்கப்படும் நாடு ஒருபோதும் சிங்கப்பூராக உருவாக முடியாது.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் அமைதியும் சமாதானமுமான வாழ்வு தொடர வேண்டுமானால் 77 வருடங்களாக வஞ்சிக்கப்படும் இனங்களின் அபிலாசைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
அதற்கு லால்காந்த மட்டும் ‘புரூஸ் லீ’யாக மாறிப் பிரயோசனம் இல்லை. அநுரவும், ரில்வினும், ஹரினியும், NPP + JVPயும் ‘புரூஸ் லீfளாக’ மாறவேண்டும். மாறுவீர்களா?
#ஞாபகங்கள் #nadarajarah_kuruparan #journalist #tamilpolitics #நடராஜா_குருபரன் #AKD #ANURAKUMARADISSANAYAKE #HariniAmarasuriya #TilvinSilva #LalKantha #VijithaHerath #WasanthaSamarasinghe #NPP #NPPGovernment #LalKantha
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.
– Nadarajah Kuruparan
https://www.facebook.com/share/p/18BTHbxtB2/