;
Athirady Tamil News

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை!!

0

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.

இந்திய நிதியுதவிகள் மே மாதத்துடன் முடிவடைகின்றமையால் நாட்டின் உண்மையான பிரச்சினைகள் இனிமேல் தான் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறிப்பாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிகளே எதிர்வரக் கூடிய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாகும்.

எனவே, இலங்கையின் இறுதி எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சீன கடன்களை மீள செலுத்துவதற்கான திட்டம் குறித்து பீஜிங்குடன் கொழும்பு அவசரமாக கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என நட்பு நாடுகள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

குறிப்பாக எரிபொருள் கொள்வனவிற்காக இந்திய நிதி உதவிகளாக 1.5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிடமிருந்து கோரப்பட்ட எரிபொருளுக்கான சலுகைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

எஞ்சியிருப்பது உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கோரிக்கையாகும். சுமார் 200 மில்லியன் டொலர் பெறுமதியான உரத்தை இந்தியா இன்னும் ஓரிரு வாரங்களில் அனுப்பி வைக்கவுள்ளது.

அதே போன்று தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பால்மாவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தமிழ் நாடு அரசுடனோ மத்திய அரசுடனோ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை. அவ்வாறு இலங்கை தனது நெருக்கடிகளை உணர்ந்து தமிழ்நாட்டிடம் கோரிக்கை விடும் பட்சத்தில் அந்த பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் இரத்த வங்கிகளுக்கு தேவைப்படுகின்ற இரத்த பாதுகாப்பு பைகளையும் இலங்கைக்கு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. அதேபோன்று உலக வங்கியினால் கொவிட் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை தற்போதைய மருந்து நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் எஞ்சிய அந்த நிதியை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர இந்தியாவிடமிருந்தோ ஏனைய நாடுகளிடமிருந்தோ அத்தியாவசிய பொருட்களுக்கான கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடியதாக தெரியவில்லை.

ஏனெனில் இலங்கையின் இறுதி நம்பிக்கையாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடனை மீள செலுத்தும் இயலுமை தொடர்பான அறிக்கையை இன்னும் தயார்படுத்தவில்லை.

குறிப்பாக சீனாவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை. அண்மையில் ஊடக சந்திப்பை நடத்திய கொழும்பிலுள்ள சீன தூதுவர் , ‘சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்லுவதாயின் உத்தேச 2.5 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்படலாம்.’ என குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்வதை சீனா விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் சீனாவின் ஒத்துழைப்பு இன்றி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமற்றதாகும்.

ஏனெனில் இலங்கை பெற்றுள்ள சர்வதேச கடன்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஆக்க பூர்வமான சமிஞ்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அதாவது இலங்கையின் கடன் செலுத்தும் இயலுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமை நெருக்கடியான நிலைமையை தோற்றுவிக்கும்.

எனவே கூடிய விரைவில் பீஜிங்குடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவது கொழும்பை பொறுத்த வரையில் சவாலான விடயமாகும். மறுபுறம் இனி ஏற்படக் கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கையிடமிருக்கும் திட்டங்கள் குறித்து சந்தேகங்களே உள்ளன.

ரஷ்யா மற்றும் சவுதி ஊடான எரிபொருள் கொள்வனவு குறித்து முன்னெடுப்புக்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் காரணமாக இவ்வாறு எரிபொருளை பெற்றுக் கொள்வதும் சவால் மிக்கதாகும்.

அதே போன்று சவுதியிலிருந்து கொழும்பிற்கு வரக்கூடிய எரிபொருள் மற்றும் ஏனைய சரக்கு கப்பல்களின் வருகையையும் மட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கொழும்பு துறைமுகத்தில் காணப்படக் கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை சேவைகள் தொடர்பிலான பிரச்சினைகளாகும்.

எனவே மே மாதம் என்பது இலங்கையின் மிக நெருக்கடியான நிலைமையின் ஆரம்பமாக கருதப்படுகிறது. எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மாத்திரமே ஏற்படக் கூடிய ஏனைய பொருளாதார சவால்களை ஓரளவு முகாமைத்துவம் செய்யலாம்.

அத்தியாவசிய பொருட்களை நெருங்கிய நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தாலும் , எரிபொருளை அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.