;
Athirady Tamil News

குரங்குகளை கட்டுப்படுத்துங்கள் !!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் விவசாயச் செய்கைக்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு நிதி செலவழித்து உப உணவு மரக்கறி, பழச் செய்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் அதிகரித்துள்ள குரங்குகளினால் பெரும் அழிவுகள் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டச் செயலகமோ பிரதேச செயலகமோ நடவடிக்கை எடுக்கவில்லை.

கிளிநொச்சியில் இயங்குகின்ற வன ஜீவராசிகள் திணைக்களம் குரங்குகளை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக பயிர்ச் செய்கைகள் குரங்குகளினால் அழிக்கப்பட்டு வருகின்றன.

கமநல சேவை நிலையங்கள் வாயு துப்பாக்கிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. கமநல சேவை நிலையத்தின் அழகுபடுத்துவதற்கும் விருந்துகள் நடாத்துவதற்கும் கமக்கார அமைப்புகளிடம் இருந்து அன்பளிப்பாக பணத்தினைப் பெற்றுக் கொள்வதில் அக்கறையாக செயற்படுபவர்கள், கமக்கார அமைப்பிடம் உள்ள நிதியில் வாயு துப்பாக்கிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வருவதில்லை.

கமக்கார அமைப்புகளிடம் உள்ள நிதியினை குரங்குகள், யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் எனப் பல்வேறு கருத்துகள் நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை கிளிநொச்சி நகரத்தில் குரங்குகளினால் பாடசாலைகள், அரச திணைக்களங்கள் என்பவற்றில் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.