;
Athirady Tamil News

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் நடப்பவை என்ன?- பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை!!

0

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடந்தது. அதனை தொடர்ந்து, 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற இருக்கிறது. இந்த கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த பிரமாண்ட விழா எப்படி நடைபெறும் என்ற விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- விழா நடைபெறும் மே 6-ந் தேதி காலை மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகிய இருவரும் தங்கமுலாம் பூசப்பட்ட மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட குதிரை வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருவார்கள். சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முடிசூட்டு விழாவின்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார்.

அதை தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார். அதன் பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும். தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து கொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். அந்த தினமே, மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார். மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களும், இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு மற்றும் சமூக குழுக்களின் 850 பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.