நள்ளிரவில் யேமன் தலைநகர் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 3 பேர் பலி!

யேமன் நாட்டு தலைநகர் சனா மீது நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
சனாவின் மக்கள் குடியிருப்பு நிரம்பிய அல்-நஹ்தாயின் பகுதியின் மீது அமெரிக்க நேற்று (ஏப்.( ) நள்ளிரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. இதில், குடியிருப்புக் கட்டடங்களின் மீது வீசப்பட்ட குண்டுகளினால் அங்குள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் அப்பகுதிவாசிகள் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களில் யேமன் நாட்டின் வடக்கு மாகாணங்கள் மீதும் முக்கிய தளமான ஹொதைதா நகரம் மற்றும் கமாரான் தீவின் மீதும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, காஸா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடர்ந்ததிலிருந்து, ஹவுதி படைகள் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளரான அமெரிக்காவின் போர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், ஹவுதி படைகளைக் குறிவைத்து யேமனின் பல்வேறு நகரங்களின் மீது அமெரிக்கா குண்டுகள் வீசி வருகின்றது.
மேலும், கடந்த 2023-ம் ஆண்டு முதல் யேமன் மீது பறந்த 18 அமெரிக்க டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தொடர்ந்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல்கள் தொடரும் எனவும் ஹவுதி கிளர்ச்சிப்படை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.