;
Athirady Tamil News

பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கா் தளபதி உதவி: என்ஐஏ விசாரணையில் தகவல்

0

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முன்னணி தளபதி பரூக் அகமதின் ஆதரவாளா்கள் உதவியிருக்கலாம் என்பது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பைசாரன் பள்ளத்தாக்கில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகாரிகளில் இடித்து, தரைமட்டமாக்கப்பட்ட 10 கட்டடங்களில் பரூக் அகமதுவின் வீடும் ஒன்றாகும். கடந்த 1996-ஆம் ஆண்டுமுதல், இவா் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறாா்.

தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத குழுவின் முன்னணி தளபதியாக அறியப்படும் பரூக் அகமது, கடந்த 2016-ஆம் ஆண்டுவரை பலமுறை இந்தியா-பாகிஸ்தான் எல்லைத் தாண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் நிலப்பரப்பு குறித்த நன்கு அறிந்தவராக, கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து வருகிறாா். அந்தவகையில், பஹல்காம் தாக்குதலும் பரூக் அகமது தீட்டிய சதிகளில் ஒன்று எனக் கருதப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பரூக் அகமதின் ஆதரவாளா்கள் உதவியுள்ளனா். அவா்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். என்ஐஏ வட்டாரங்களின்படி, இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோரின் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.