;
Athirady Tamil News

தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி – கஜேந்திரகுமார்!

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் –

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது.

இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.

இதனூடாக வடக்கு கிழக்கில் தென் இலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்படாது என்பதை ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய பரப்பில் அனேக பிரதேசங்களில் தமிழ் தேசியம் வெற்றிபெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது.

அதேபோன்று தமிழ் தேசிய பேரவைக்கும் இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் மக்கள் கொடுத்துள்ள அல்லது கிடைத்த வெற்றியாகவும் இதை நாம் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்.

இதனால் தமிழ் தரப்பு ஆட்சி அமைக்க நாம் தமிழ் அரசு கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆரரவை கொடுக்க பின்னிற்கமாட்டோம்.

குறிப்பாக ஆட்சி அதிகாரக் கதிரைக்கான தேசியமாக ஒற்றுமையாக இல்லாது தூய்மையான ஆதரவுக்கான அழைப்பாக இருந்தால் அந்த அழைப்புக்கு தமிழ் தேசிய பேரவை ஆதரவு கொடுக்கும்.

மேலும் ஒற்றுமையை வலுப்படுத்த தமிழ் அரசியல் பரபில் உள்ள பலதரப்பட்டவர்களுடனும் பேசியிருந்தேன்.
அதற்கான சாதக பெறுபேறும் கிடைத்தது.

அதேநேரம் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலையும் எம்மிடம் இல்லை. அவர்களுடனும் பேசியே பயணிக்க வேண்டும்.

தவறான பாதையில் மக்கள் வழிநடத்தப் படுவதை உணர்ந்து அதை வெளிப்படுத்தி தேசியத்தின் பாதையில் மக்களை கொண்டுசெல்ல நாம் வழிவகுத்தோம்.

அதன் ஒரு பகுதியாகவே இம்முறை தமிழ் தேசிய பேரவை என்ற கூடின் கீழ் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் மக்களிடம் சென்றிருந்தோம்.

அதற்கான அங்கீகாரதை மக்கள் தந்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளின் போக்குக்கு மக்கள் ஒரு பாடத்தைகொடுத்தார்கள். அந்த பாடத்தின் ஊடான கிடைத்த படிப்பினைகள் தற்போது தமிழ் தேசிய பாதையை மீளவும் உறுதிபடுத்திக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.