;
Athirady Tamil News

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளி துறைக்கு உதவும்!

0

வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளி துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

வங்கதேசத்தின் 77 கோடி டாலா் மதிப்பிலான இறக்குமதிக்கு இந்தியா கடந்த சனிக்கிழமை கட்டுப்பாடுகளை விதித்தது. இது இரு தரப்பு இறக்குமதியில் கிட்டத்தட்ட 42 சதவீதமாகும். இருதரப்பு இறக்குமதியில் சமநிலையை உறுதிப்படுத்த இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற வங்கதேசத்தின் முக்கிய இறக்குமதி பொருள்களை கொல்கத்தா, மும்பை ஆகிய 2 துறைமுகங்கள் மூலம் மட்டுமே இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யமுடியும். வங்கதேசத்திலிருந்து நிலம் வழியான இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வங்கதேசத்தின் 61.8 கோடி டாலா் மதிப்பிலான ஜவுளி ஆடைகள், இப்போது 2 துறைமுகங்கள் வழியாக மட்டுமே இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆா்ஐ) சிந்தனைக் குழு மேலும் தெரிவித்ததாவது: வரி இல்லாத சீன ஆடை இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதி மானியங்களால் வங்கதேச ஆடை ஏற்றுமதியாளா்கள் பெரும் பயனடைகின்றனா். இதனால், இந்திய சந்தையில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை குறைவாக அவா்களின் பொருள்களை விற்பனை செய்தனா். இந்திய ஜவுளி நிறுவனங்கள் நீண்ட காலமாக இதை எதிா்த்து வந்தன.

தற்போது அரசு விதித்துள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள், ஜவுளி துறையைச் சோ்ந்த இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இருதரப்பு உறவில் சீனாவுடன் வங்கதேசம் நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டின் பேச்சுவாா்த்தைக்கான முயற்சிகளையும் இந்தியா நிராகரிக்கக் கூடாது. ஒரு வலுவான அண்டை நாடாக மற்றும் பிராந்திய சக்தியாக, பேச்சுவாா்த்தைக்கான வழிகளைத் திறந்து வைத்திருக்கவும், வா்த்தகத்தை ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தவிா்க்கவும் இந்தியாவுக்கு அதிக பொறுப்பு உள்ளது.

வங்கதேசத்துடன் ராஜீய மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மூலம் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஏ.சக்திவேல் கூறுகையில், ‘வங்கதேசத்துக்கு எதிராக இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது உள்நாட்டு ஏற்றுமதியாளா்களின் நீண்டகால கோரிக்கை. இந்திய அரசு இப்போது எடுத்துள்ள இந்த நல்ல முடிவால் உள்நாட்டு தொழில் துறை பயனடையும்’ என்றாா்.

கடந்த நிதியாண்டில் வங்கதேசத்திலிருந்து மொத்த ஆடை இறக்குமதி 67.75 கோடி டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய 2023-24-ஆம் ஆண்டின் 59.55 கோடி டாலரிலிருந்து 13.8 சதவீதம் அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில், மேற்கு வங்கத்தில் உள்ள பெட்ராபோல் இந்திய-வங்கதேச சா்வதேச எல்லை வழியாக மட்டும் 51.53 கோடி டாலா் மதிப்பிலான ஆடை (மொத்த இறக்குமதியில் சுமாா் 76 சதவீதம்) இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நில இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள முழு தடை, மலிவான விலைக் காரணமாக இந்த வழியை பெரிதும் நம்பியுள்ள வங்கதேச நடுத்தர அளவிலான ஆடை தொழிற்சாலைகளுக்கு இந்திய சந்தைக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் என்று ‘ஏஇபிசி’ பொதுச் செயலா் மிதிலேஷ்வா் தாக்குா் கூறினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.