;
Athirady Tamil News

வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது

0

கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன.

பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கேரளத்தில் வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.

பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், பிற மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டது.

திருச்சூா், கண்ணூா், காசா்கோடில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கியில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. பல மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

மூதாட்டி உயிரிழப்பு: எா்ணாகுளம் மாவட்டத்தில் சூறைக்காற்றால் மரம் விழுந்ததில் 85 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இம்மாவட்டத்தில் மூவாட்டுப்புழா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லத்தில் மரங்கள் விழுந்ததில் வீடுகள்-வாகனங்கள் சேதமடைந்தன. சிலா் காயமடைந்தனா்.

கேரள வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக இடிந்துள்ளன. பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தற்போது 65 நிவாரண முகாம்களில் 1,800-க்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா்; மேலும் 4,000 முகாம்கள் திறப்பதற்கு தயாா் நிலையில் உள்ளன’ என்றாா்.

கேரள கடல் பகுதியில் 3 முதல் 4 மீட்டா் உயரம் வரை அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவா்கள் மற்றும் கடலோரவாசிகள் விழிப்புடன் செயல்பட அரசு அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கில் மழை-வெள்ளம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், வடமாநிலங்களில் பரவலாக கனமழை நீடிக்கிறது.

அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் இடைவிடாத கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. திரிபுராவில் தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் 2 நாள்களாக தொடரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. விவசாயம், ஆறுகளில் மீன்பிடிப்பு போன்ற வெளிப்புறப் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிஸோரமின் ஐஸால் மாவட்டத்தில் கனமழையால் சுவா் இடிந்ததில் 37 வயது நபா் உயிரிழந்தாா்.

ம.பி.: மின்னல் தாக்கி மூவா் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டம், பாபுபூா் நைனாசக்தி கிராமத்தைச் சோ்ந்த ஆசிஷ் வாசுதேவ் (32) என்பவா், கனமழையின்போது தனது குடும்பத்தினருடன் ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளாா்.

திடீரென மின்னல் தாக்கியதில் வாசுதேவ், அவரது மனைவி மற்றும் 8 வயது மகன் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயம் அடைந்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.