;
Athirady Tamil News

நன்றியற்ற ஈரான் தலைவர்! டிரம்ப் குற்றச்சாட்டு!

0

அமெரிக்காவை விமர்சித்த ஈரான் தலைமை மதகுருவை டொனால்ட் டிரம்ப் நன்றியற்றவர் என்று விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் நெற்றிப் பொட்டில் ஈரான் அறைந்ததாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பேசியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் “ஈரான் மதகுரு கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியுள்ளேன். ஆனால், அவர் அதற்கான நன்றி இல்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீசவும் உத்தரவிடுவேன்.

கமேனி, எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதுகூட எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கமேனியின் வாழ்க்கையை முடிக்க இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகளை அனுமதிக்க மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும், கமேனி குறித்த டிரம்ப்பின் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து, அப்பாஸ் கூறுகையில், ஓர் ஒப்பந்தத்தை (அணுசக்தி ஆயுத ஒப்பந்தம்) அவர் (டிரம்ப்) உண்மையாக விரும்பினால், ஈரான் மதகுரு கமேனிக்கு எதிராக அவமரியாதையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சை ஒதுக்கி வைக்க வேண்டும். அவரின் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் காயப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இதனுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால், வியாழக்கிழமையில் ஈரான் நாட்டு மக்களிடையே அந்நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உரையாற்றுகையில், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது, எந்த உயிர்ச் சேதமும் இன்றி தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் நெற்றிப் பொட்டில் ஈரான் அறைந்துள்ளது. இஸ்ரேல் அழிந்து விடும் என்பதால்தான், போரில் அமெரிக்காவும் ஈடுபட்டது என்று சூளுரைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.