;
Athirady Tamil News

இஸ்ரேலின் ‘டாடி’ யார்? ஈரான் கிண்டல்!

0

ஈரானுடனான போரில் அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஓடியதாக ஈரான் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியை நன்றியற்றவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த நிலையில், டிரம்ப்பின் கூற்றை திரும்பப் பெறுமாறு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் அப்பாஸ் அராக்சி, “ஓர் ஒப்பந்தத்தை (அணுசக்தி ஆயுத ஒப்பந்தம்) அவர் (டிரம்ப்) உண்மையாக விரும்பினால், ஈரான் மதகுரு கமேனிக்கு எதிராக அவமரியாதையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சை ஒதுக்கி வைக்க வேண்டும். அவரின் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் காயப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்.

ஈரானின் ஏவுகணைகளால் தரைமட்டமாக்கப்படுவதை விரும்பாத இஸ்ரேல், `டாடி’யிடம் ஓடுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை. அதனை வெளிக்கொண்டு வந்த ஈரானிய மக்கள், மற்ற அச்சுறுத்தல்களையோ அவமதிப்புகளையோ ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

ஈரானிடம் ஏதேனும் தவறிழைக்கப்பட்டால், அதன் உண்மையான திறன்களை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டோம். ஆகையால், மரியாதை கொடுக்கப்பட்டு, மரியாதை பெறப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்தியதாக, டிரம்ப்பை `டாடி’ என்று நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கேலி செய்திருந்தார். அதனைக் குறிப்பிட்டுத்தான், இஸ்ரேலை அப்பாஸ் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் உள்நுழைந்த அமெரிக்காவுக்கும் நெற்றிப் பொட்டில் அறைந்ததாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி விமர்சித்திருந்தார்.

கமேனியின் கூற்றுக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியுள்ளேன். ஆனால், அவர் அதற்கான நன்றி இல்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீசவும் உத்தரவிடுவேன் என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.