;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

0

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி, 270 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (செப். 24) புறப்பட்டுச் சென்றது.

அப்போது, மஸ்தூங் பகுதியின் அருகில் சென்றபோது தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இத்துடன், ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், தண்டவாளத்தில் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்ற பின்பு மீண்டும் அப்பகுதியில் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப். 23 ஆம் தேதி, பலூசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தனின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய ரயில் பாதையின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், நடைபெற்ற பாதுகாப்புச் சோதனைகளில் தண்டவாளம் சேதமடையவில்லை என்பது உறுதியானவுடன் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.

முன்னதாக, நிகழாண்டின் (2025) மார்ச் மாதத்தில் பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றபோது ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்த தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்டனர்.

மேலும், கடந்த ஜூன் மாதம் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.