;
Athirady Tamil News

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி!

0

காஸா மீது போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில், ஹமாஸ் கிளர்ச்சிப்படை மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த அக்.10 ஆம் தேதி போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஹமாஸ் படைகள் போர்நிறுத்ததை மீறியதாகக் கூறி இஸ்ரேல் படைகள் காஸா மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்தன.

இதனைத் தொடர்ந்து, ரஃபா பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், காஸா மீது தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், காஸா மீது நேற்று முன்தினம் (அக். 28) இரவு முதல் நேற்று அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 253 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், போர்நிறுத்ததை மீறியதாகக் கூறப்படும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் படை மறுத்துள்ளது. இந்தத் தாக்குதலானது, கடந்த அக்.10 ஆம் தேதி முதல், காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், இஸ்ரேலின் ராணுவ வீரர் கொல்லப்பட்டதால், காஸா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.