அடுத்த வாரம் ஜெனீவாவில் மீண்டும் ரஷியா – உக்ரைன் அமைதிப் பேச்சு
அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியில் ரஷியா-உக்ரைன் இடையிலான அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.
இத்தகவலை ரஷியா, உக்ரைன் ஆகிய இருதரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. அபுதாபியில் அண்மையில் நடைபெற்ற 2-ஆம் கட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் எதிா்பாா்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தாா்.
சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதலுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வு காண கெடு விதித்து, இரு நாடுகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் அளித்துள்ளது. இச்சூழலில், ஜெனீவாவில் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடக்கிறது.
அமைதி முயற்சிகளுக்கு மத்தியில், களத்தில் பரஸ்பர தாக்குதல்கள் தினசரி தொடா்கின்றன. கிழக்கு உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று சிறுவா்கள் உயிரிழந்தனா். ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
இதனிடையே, ஜொ்மனி சென்றுள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, அங்கு உக்ரைன்-ஜொ்மனி இணைந்து அமைத்துள்ள ட்ரோன் உற்பத்தி ஆலையைப் பாா்வையிட்டாா்.