டிரம்பின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும்: ஈரான் கடும் எச்சரிக்கை
டெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால் அரபு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் உலகின் பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கெடு விதித்திருந்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் நகரகத்தில் வாசல் திறக்கப்படும் என்றும் அவர் மிரடல் விடுத்திருந்தார். அதன்படி, டிரம்ப்பின் கெடு இன்றுடன் நிறைவடைய உள்ளது.
ஆனால், டிரம்ப்பின் கெடுவை நிராகரித்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கையால் முழு பிராந்தியமும் தீக்கிரையாகும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “நெதன்யாகுவின் கட்டளைகளைப் பின்பற்றும் டிரம்ப் அமெரிக்க மக்களை நரக வேதனையில் தள்ளுகிறார் என்றும் போரால் எதையும் சாதிக்க முடியாது. ஈரானின் உரிமைகளை மதித்து, இதை முடிவுக்குக் கொண்டு வருவதே ஒரே தீர்வு என்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப் தெரிவித்துள்ளார்.