அமெரிக்க தீர்வை வரி விடயத்தில் இலங்கைக்கு என்ன நடக்கும்?

ரொபட் அன்டனி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த பரவலான தீர்வை வரிகள், அவரது அதிகாரத்தை மீறி விதிக்கப்பட்டவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் (புதன்கிழமை) தீர்ப்பளித்தது. நியூயோர்க் மன்ஹட்டனில் அமைந்துள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, அவசரகால பொருளாதார அதிகாரங்களை மேற்கோள் காட்டி ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரிகளை நிறுத்தியது. இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் புதன்கிழமை உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்த நிலையில் அந்த இடைநிறுத்தல் தீர்மானம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி தீர்வை வரிகளை அறிவித்திருந்தது. அதன்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 44 வீத தீர்வை வரியை ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார். இலங்கை கிட்டத்தட்ட 3000 மில்லியன் டொலர்களுக்கு ஆடைத் துறை உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இவற்றுக்கு 44 வீத தீர்வை வரியும், 10 வீத அடிப்படை வரியும் விதிக்கப்பட்டுள்ளன.
எனினும், பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி இந்த தீர்வை வரி அமுலாக்கத்தை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். அதன்படி, ஜூலை 2 அல்லது 5ஆம் திகதி வரை அந்த இடைநிறுத்தம் அமுலில் உள்ளது. இந்த பின்னணியில் தற்போது நியூயோர்க் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்வை வரிக்கு எதிராக தீர்ப்பளித்தபோதும் அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
இலங்கை தொடர்ந்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்னரும் இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன் விளைவாக அமெரிக்காவும் இலங்கையும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதாகவும் அறிவித்தன. மூன்று மாத காலம் முடிய இன்னும் ஒரு மாதமளவில் மட்டுமே உள்ளது.
44 வீத தீர்வை எவ்வாறு விதிக்கப்பட்டது?
இந்த 44 வீத வரி மற்றும் 10 வீத அடிப்படை வரி எவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாகும். அமெரிக்கா பொதுவாகவே சகல நாடுகளினதும் இறக்குமதிகளுக்கு, அதாவது அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு, 10 வீத வரியை அடிப்படையாக விதித்திருக்கிறது. எந்தவொரு நாடும் அமெரிக்காவுக்கு எதனை ஏற்றுமதி செய்தாலும் 10 வீத வரியைச் செலுத்த வேண்டும். அதாவது, அந்த நாட்டில் அந்தப் பொருட்களை இறக்குமதி செய்கின்றவர்கள் இவ்வாறு வரியைச் செலுத்த வேண்டும்.
அதன் பின்னர், அமெரிக்கா தன்னுடன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் செய்கின்ற நாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக வித்தியாசத்தைப் பார்த்திருக்கிறது. அந்த வித்தியாசத்தின் அடிப்படையிலேயே ஏனைய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, இலங்கை அமெரிக்காவுக்கு வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட 3000 மில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இலங்கை கிட்டத்தட்ட 350 மில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்கிறது. இதன் ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசம் 88 வீதமாகக் காணப்படுகிறது. அதை இரண்டாகப் பிரித்து 44 வீத தீர்வையை இலங்கைக்கு அமெரிக்கா விதித்திருக்கிறது.
இலங்கைக்கு என்ன பாதிப்பு?
இலங்கை அமெரிக்காவுக்கு 3000 மில்லியன் டொலர்களுக்குச் செய்கின்ற ஏற்றுமதியில் ஆடைத்துறை உற்பத்திகளே அதிகளவில் காணப்படுகின்றன. இறப்பர், தேயிலை உள்ளிட்ட 80 வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், ஆடை உற்பத்திகளே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்கா இலங்கையிலிருந்தான இறக்குமதிக்கு வரி விதித்துள்ளதால், அந்நாட்டுக்குள் குறித்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். அதாவது, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் இலங்கையின் ஆடை உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்கலாம். இது அமெரிக்க மக்களின் கொள்வனவு சக்தியைப் பாதிக்கும். தற்போது இந்த விடயம் குறித்து அமெரிக்காவில் பரவலாக பேசப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கலாம். ஆனாலும் கூட, ஏற்றுமதி வருமானத்தைப் பெறுகின்ற இலங்கைக்கே அதிக பாதிப்பு ஏற்படும்.
இலங்கை ஆடைத்துறையை எப்படி பாதிக்கும்?
இந்நிலையில், இது எப்படி இலங்கை ஆடைத் துறையைப் பாதிக்கும் ? இலங்கையில் பல ஆடைத் தொழில் நிறுவனங்கள் காணப்படுகின்றன. பெரியளவிலான நிறுவனங்கள், சிறியளவிலான நிறுவனங்கள் என ஆடைத் தொழில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்நிலையில், இலங்கையிலிருந்தான அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறையும் பட்சத்தில் இலங்கையின் ஆடைத் துறை பாதிக்கப்படும். இலங்கையில் ஆடைத்துறை நிறுவனங்களில் ஊழியர்கள் குறைக்கப்படலாம். அதாவது, தொழில் இழப்புகள் ஏற்படலாம். ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படலாம். அவர்களுக்கான வரப்பிரசாதங்கள் குறையலாம். இவ்வாறு பல வழிகளில் இலங்கையின் ஆடைத் துறைக்கு பாதிப்பு ஏற்படும்.
டொலர் உள்வருகை பாதிக்கும்?
இலங்கைக்கு வருடமொன்றுக்குக் கிடைக்கின்ற 12 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தில் 5 பில்லியன் டொலர்கள் ஆடை மூலம் கிடைக்கிறது. எனவே, இந்த ஆடைத் துறை ஊடான ஏற்றுமதி வருமானம் பாதிக்கப்பட்டால் அது இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் தாக்கம் செலுத்தும். ஏற்கனவே இலங்கை பாரிய டொலர் பற்றாக்குறையில் இருக்கிறது. இன்னும் ஏற்றுமதி வருமானம் குறையும் பட்சத்தில் அது மேலும் தாக்கம் செலுத்தும். இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வருடத்துக்கு 12 பில்லியன் டொலர்களாகவும், இறக்குமதி செலவு 22 பில்லியன் டொலர்களாகவும் இருக்கிறது. இதில் ஒவ்வொரு வருடமும் 10 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம், வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் அனுப்புகின்ற டொலர்கள் மற்றும் கடன்கள் ஊடாகவே இலங்கை சமாளிக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பினால் மேலும் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பில் ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் திறைசேரி செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை தலைவர், ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர், வெளிவிவகார அமைச்சின் பொருளாதாரப் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்களும் இந்தக் குழுவுடன் இணைந்து செயற்படுகின்றனர். இந்தத் தீர்மானம் காரணமாக இலங்கையின் ஆடைத் துறை மட்டுமன்றி அதனூடான முழுப் பொருளாதாரக் கட்டமைப்பும் ஆட்டம் காணலாம்.
ஏற்கனவே இலங்கை வேலையின்மை அதிகரிப்பு, வறுமை அதிகரிப்பு என்பவற்றினால் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எனவே, இந்த வரி விதிப்பினால் ஆடைத்துறை பாதிக்கப்பட்டு தொழில் இழப்புகள் ஏற்படுமாயின், அது நாட்டின் வேலையின்மைப் பிரச்சினையை தீவிரப்படுத்தும், வறுமையை அதிகரிக்கும்.
வரி விதிப்பு அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் இலங்கையிலிருந்தான இறக்குமதிகளைக் குறைத்தால், இலங்கைக்கு அது மிகப்பாரிய பொருளாதார அடியாக விழும்.
15 இலட்சம் பேரின் வாழ்வாதாரம்
இலங்கையில் கிட்டத்தட்ட ஆடைக் கைத்தொழில் துறையில் 3 இலட்சம் பேர் நேரடியாகத் தொழில் செய்கின்றனர். அவர்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வாழ்கின்றனர். சிறியளவிலான ஆடைக் கைத்தொழில் நிறுவனங்களும் இலங்கையில் செயற்படுகின்றன. அந்த நிறுவனங்கள் இந்த பாதிப்பினால் ஒன்று தமது உற்பத்திகளைக் குறைக்க வேண்டி வரும். அல்லது நிறுவனங்களை மூட வேண்டிய அழுத்தம் கூட ஏற்படலாம்.
ஆனால், இலங்கை மட்டும் இந்த தீர்வை வரியை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதிகளவு ஏற்றுமதி செய்கின்ற மற்றுமொரு நாடான பங்களாதேஷுக்கு 37 வீதம் விதிக்கப்பட்டுள்ளது வியட்நாமுக்கு 46 வீதம், இந்தியாவுக்கு 26 வீதம், கம்போடியாவுக்கு 49 வீதம் என தீர்வைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து நாடுகளும் பாரியளவில் பாதிப்பை சந்திக்கவுள்ளன.
எனினும், ஆடை உற்பத்தியில் ஈடுபடுகின்ற பெரும்பாலான நாடுகளுக்கும் வரி விதித்துள்ளதால், அமெரிக்க இறக்குமதியாளர்கள் எந்தவொரு நாட்டிடமிருந்தும் இறக்குமதியை செய்யாமல் இருக்க முடியாது. அவர்களுக்கும் ஆடை உற்பத்திகளுக்கான தேவை இருக்கிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்து தேவையை நிறைவேற்றுவது உடனடியாக சாத்தியம் இல்லை. எனவே, வரி அதிகமாக இருந்தாலும் இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளை விட இலங்கைக்கான வரி அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும், அண்மையில் சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்று மூடப்படுவதாக அறிவித்தது. இதனால் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில்வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து படிப்படியாக மீண்டு வருகிறது. எனவே, இந்த அறிவிப்புகள் நிச்சயமாக சாதகமாக இல்லை.
என்ன செய்வது?
கிடைத்திருக்கின்ற கால அவகாசத்தைப் பயன்படுத்தி, இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, வரி விதிப்பை முழுமையாகத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இந்த வரி விதிக்கப்படுமானால், அது நிச்சயமாக இலங்கையின் ஆடைத் துறையைப் பாதிக்கும். அது தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும். எனவே, இந்த விடயத்தில் இராஜதந்திர ரீதியான உடனடி அவசர திட்டங்கள் அவசியம் என்பதுடன், நீண்டகால ரீதியான பிராந்திய திட்டங்களையும் இலங்கை வகுக்க வேண்டியுள்ளது.
நீண்டகால ரீதியாக மாற்று ஏற்றுமதி சந்தைகளை நாடுவதற்கு அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் ஏற்றுமதிகளை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.
இலங்கை – இந்திய வர்த்தக உறவு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமுலில் இருந்தாலும், அதனுடைய வர்த்தகப் பெறுமதி குறைவாகவே உள்ளது. வர்த்தக திணைக்கள தரவுகளின்படி இலங்கை வருடாந்தம் சுமார் 800 மில்லியன் டொலர்களுக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அதில் 500 மில்லியன் டொலர் மட்டுமே இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோன்று, இந்தியாவிடமிருந்து இலங்கை நான்கு பில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதில் 200 மில்லியன் அளவில் மட்டுமே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் நடைபெறுகிறது. எனவே, இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். உதாரணமாக, தற்போது இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைத்துறை உற்பத்திகளின் அளவை அதிகரிக்க வேண்டும். இதற்காக இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அடுத்த கட்டத்திற்கு இலங்கை கொண்டு செல்வது அவசியமாகிறது.
அதேபோன்று, சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை செய்வது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய சந்தைகளைக் கொண்டுள்ள இந்த இரண்டு நாடுகளும் இலங்கைக்கு மிக அருகில் உள்ளவை. எனவே, இந்த நாடுகளின் சந்தையைப் பயன்படுத்திக் கொள்வது எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையும்.
அதுமட்டுமின்றி, இந்த இரண்டு நாடுகளும் தற்போது பொருளாதார ரீதியாக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. சீனா உலக அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்தியா மூன்றாவது இடத்திற்கு வருகிறது. எனவே, இந்த நாடுகளுக்கான ஏற்றுமதிகளை இலங்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், புதிய உற்பத்திகளை நோக்கியும் இலங்கை நகர வேண்டும். பூகோள உற்பத்தி சங்கிலியில் இலங்கை பங்கெடுப்பது அவசியமாகிறது. உதாரணமாக, தற்போது உலக நாடுகளில் ஒரு கையடக்கத் தொலைபேசியை உற்பத்தி செய்வதில் கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுக்கின்றன. ஒவ்வொரு உதிரி பாகமும் ஒவ்வொரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அனைத்து நாடுகளும் அந்த உற்பத்தி வலையமைப்பில் தங்கியிருந்து நன்மையடைகின்றன. இந்த சங்கிலித் தொடருக்குள் இலங்கை பங்கெடுக்க வேண்டும். உதாரணமாக, அந்தத் தொலைபேசியின் உதிரி பாகங்களில் ஏதாவது ஒன்றை இலங்கை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்காக இலங்கை தன்னை சிறப்புத் தேர்ச்சிக்கு உட்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இதுபோன்ற மாற்றங்களை நோக்கி இலங்கை நீண்டகாலத்தில் பயணிப்பது தேவையாக உள்ளது.