;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை விட உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் கிடைக்கின்றன- ஜெலன்ஸ்கி தகவல்..!!

0

29.5.2022

04.30: உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

01.35: கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷிய படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ளன. அங்குள்ள லைமன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. மேலும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ் புறநகர் பகுதியில் இருந்து ரஷியப் படைகளை விரட்ட தீவிரமாக போரிட்டு வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

12.40: உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலைப்பகுதியில் உள்ள 2,500 உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு ரஷிய அதிபர் புதினுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கேட்டுக் கொண்டுள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

21.30: கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை உக்ரைன் மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்களுடன் தொலைபேசி மூலம் விவாதித்துள்ளார். உலக கோதுமை விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை ரஷியாவும் உக்ரைனும் வழங்கி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

28.5.2022

22.00: ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ப்ஸ் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், உக்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் வெற்றிபெற மாட்டார் என்றார்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு நேரடியாக போரில் பங்கேற்காது. உக்ரைன் மீது போர் தொடுத்த விஷயத்தில் அதிபர் புதின் அதன் நட்பு நாடுகளின் வலிமையை குறைவாக எடை போட்டுவிட்டார் எங்கள் நோக்கம் இந்தப் போரில் ரஷியா வெற்றிபெறக் கூடாது என்பதே. அவர் வெற்றியும் பெறமாட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.

16.45: உக்ரைன் போரில் ரஷியா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் கோடி முதல் ரூ.45 லட்சம் கோடி) இருக்கும் என கீவ் பொருளாதார கல்லூரி கணித்துள்ளது.

02.15: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல கலாச்சாரத்தையும் அழித்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அருங்காட்சியகங்கள் மீது ரஷிய அதிபர் புதின் தாக்குதல் நடத்தி வருகிறார். இது உக்ரைனின் கலாச்சாரத்தையே அழிக்கும் ஆபத்தை குறிக்கிறது’ என கூறியுள்ளார்.

09.40: ரஷிய உக்ரைன்போர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் 4031 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகள் மட்டும் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 4,735 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான மரணங்கள் டோநெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகள் நடந்துள்ளது. அந்த பகுதியில் மட்டும் 2,274 பொதுமக்கள் இறந்துள்ளனர்.

04.10: ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது முற்றிலும் இன்றியமையாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

03.10: ரஷியாவிற்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசீலித்து வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

02.45: உக்ரைன் அதிபர் ஜெலஸ்ன்கியுடன், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்த இத்தாலி அரசின் ஆதரவை அவர் எடுத்துரைத்தார்.

போர் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளை அச்சுறுத்தும் உணவு நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில், தானிய ஏற்றுமதியை அனுமதிக்க உக்ரைன் துறைமுகங்களை திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்தனர்.

01.50: ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் ஆலோசனை நடத்தினார்.

வரும் மாதங்களில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப பைடன் நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் பிளிங்கன் அப்போது கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

12.40: ரஷியா ஆர்த்தடாக்ஸ் தேவாலய அமைப்பில் இருந்து பிரிவதாக உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு ஆதரவாக செயல்படும் ரஷிய தேவாலய தலைவரை அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த போர் கடவுளின் கட்டளையை மீறுகிறது என்றும், இதை கண்டிப்பதாகவும, பொதுமக்களை கொல்ல வேண்டாம் என்றும் உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் தேவால தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.