;
Athirady Tamil News

கந்தசஷ்டி திருவிழா கோலாகலம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்..!!

0

அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது.

சுவாமி கடற்கரையில் எழுந்தருளல்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான நேற்று மாலையில் நடந்தது. இதையொட்டி மதியம் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

மாலையில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை3 மணிக்கு கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். தொடர்ந்து 3.50 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.

சூரசம்ஹாரம்
முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகம் கொண்ட தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்றுமுறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிராக நின்றான். 4.35 மணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார். அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்றுமுறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். 4.50 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் சம்ஹாரம் செய்தார். தனது சகோதரர்களின் இழப்பால் கோபம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான். தொடர்ந்து 5.10 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார்.

இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்து கொண்டார். சூரசம்ஹாரம் நிகழ்ந்தபோது வானத்தில் கருடன் மூன்று முறை சுற்றி வந்து வட்டமிட்டது. அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

சாயாபிஷேகம்
சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சினம் தணிந்த சுவாமிக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி கிரிப்பிரகாரம் வழியாக வலம் வந்து, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளினார். அங்குள்ள கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

லட்சக்கணக்கான பக்தர்கள்
விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்
சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரைகள், பெரிய டி.வி.க்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. விழாவையொட்டி சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று திருக்கல்யாணம்
இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.