;
Athirady Tamil News

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனத்தை உடனடியாக ரத்து செய்ய கோவில் நிர்வாகத்திற்கு கேரள ஐகோர்ட் உத்தரவு..!!

0

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜை விழாவுக்காக கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்தனர். அன்று முதல் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் அறிவித்தது. இதனை கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை செய்தது. மேலும் அந்த தனியார் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது கேரள ஐகோர்ட்டு, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சம முக்கியத்துவம் வழங்க வேண்டும். கோவிலில் அனைவரும் ஒன்றே. எனவே இக்கோவிலில் வி.ஐ.பி. தரிசன முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவித்தது. சபரிமலை கோவிலுக்கு இம்முறை மலைபாதையும் திறந்து விடப்பட்டுள்ளது. எரிமேலி, வண்டிபெரியார் மற்றும் சத்திரம் வழியாக பக்தர்கள் சன்னிதானம் செல்கிறார்கள். நேற்று வரை இந்த பாதை வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் இதற்காக பக்தர்களுக்கு இந்த பாதையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.