;
Athirady Tamil News

90 வயதிலும் மனம் தளராத இரா.சம்பந்தன்: தீபாவளியன்று தீர்வுக்காக களமிறங்குவோம் என சூளுரை

0

இலங்கையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசு விரைந்து தீர்வை வழங்காத பட்சத்தில் சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே 90 வயதை பூர்த்தி செய்துள்ள இரா.சம்பந்தன், இவ்வாறு உணர்ச்சிகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு தொடர்பாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை எனவும் இரா.சம்பந்தன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரினவாத அடக்குமுறை
அடுத்த வருடத்திற்கு தீர்வை வழங்குவதாக ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் கூறியிருந்த போதிலும் தீர்வு விடயத்தில் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளார்கள் என கூறியுள்ள இரா.சம்பந்தன், தற்போதும் அவர்கள் பேரினவாத அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான கருமங்களை முன்னெடுக்கப்பட தாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு
அரசியல் தீர்வு விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதையும் கூறிவைக்க விரும்புவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதனூடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.