இஸ்ரேலின் இராணுவ புலனாய்வுத் தலைவர் ராஜினாமா., தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதற்கு பொறுப்பேற்பு
இஸ்ரேலிய இராணுவ புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா (Maj. Gen. Aharon Haliva) பதவி விலகியுள்ளார்.
அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தாக்குதலை முறியடிக்க முடியாமல் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த முதல் மூத்த அதிகாரி இவர்தான்.
அஹரோன் ஹலீவாவின் ராஜினாமாவை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டது.
மேஜர் ஹலிவா இராணுவத்திற்கு தனது ராஜினாமா கடிதத்தில், “அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் இஸ்ரேல் மீது ஒரு கொடிய தாக்குதலை நடத்தியது. எனது தலைமையில் பணிபுரியும் குழு அந்த தாக்குதலைக் கண்டறியத் தவறிவிட்டது.
அன்றிலிருந்து நான் மனவேதனையுடன் வாழ்ந்து வருகிறேன். எனவே, எனது பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்துள்ளேன்” என்று எழுதியுள்ளார்.
அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலை தாக்கியது.
இஸ்ரேலின் கூற்றுப்படி, இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், ஹமாஸ் 250-க்கும் மேற்பட்டவர்களை சிறைபிடித்தது.
இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது சமீப காலங்களில் நடத்தப்பட்ட மிகப்பாரிய தாக்குதல்களில் ஒன்றாகும், இதை இஸ்ரேலிய இராணுவம் நிறுத்தத் தவறிவிட்டது.