பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ள பாகிஸ்தான் தந்தை

பாகிஸ்தானிய தந்தை ஒருவர் தனது பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த குடும்பம், இரண்டு குழந்தைகளுக்கான உயிர்க்காப்பு சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே SAARC விசா சலுகைகள் இரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த குடும்பம் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
இரண்டு குழந்தைகளும் (வயது 9 மற்றும் 7) பிறவியிலேயே இதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“பஹல்காம் சம்பவத்துக்குப் பிறகு, உடனடியாக இந்தியாவை விட்டு செல்லும்படி எங்களுக்கு உத்தரவு கிடைத்தது. ஆனால் குழந்தைகளின் அறுவை சிகிச்சை அடுத்த வாரம் நடக்க இருக்கிறது,” என அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார்.
அவர்கள் சுமார் 1 கோடி செலவழித்து சிகிச்சை ஏற்பாடுகளை செய்துள்ளனர். வைத்தியசாலை மற்றும் வைத்தியர்கள் உதவுவதாக இருந்தாலும், இந்திய அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில், “எங்கள் பிள்ளைகளின் சிகிச்சை முடியும் வரை இருநாடுகளும் அனுமதி வழங்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.
இதனிடையே, வாகா எல்லை மூலமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர் பாகிஸ்தானிலிருந்து திரும்பியதாகவும், பல பாகிஸ்தானியர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் உருவாகி இருக்கும் புதிய பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.