அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை: ஆக. 1 முதல் அமல்!
இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்பு நடவடிக்கையை 90 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அறிவித்த கால அவகாசம் ஜூலை 9 முடிவடைகிறது.
இந்தியா உள்ளிட்டட பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த ஏப்ரலில் கூடுதல் வரி விதித்தது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 26 சதவீத வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.
இந்தநிலையில், இந்த நடவடிக்கை ஆக. 1முதல் முறையாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க கருவூல துறைச் செயலர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில் ஒரு முடிவு எட்ட, மேலும் சில நாள்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.