’ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்’ !! (வீடியோ)

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமித்த பின்னர் உடனடியாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும். சகல அதிகாரங்களும் ஜனாதிபதி வசம் இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்றஉறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்ற உத்தரவு சட்டவிரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 52(3) பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து அமைச்சின் செயலாளர்களும் பதவி வகிப்பதை நிறுத்துவார்கள். அந்த வகையில் பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் அனுமதி சட்டவிரோத உத்தரவு எனக் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. எனினும் அமைச்சராவை மற்றும் பிரதமருக்கான முழுமையான அதிகாரிகள் இப்போது ஜனாதிபதியிடம் உள்ள காரணத்தினால் உடனடியாக பிரதமர் ஒருவரையும், அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும். ஜனாதிபதி மீது நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. அவர் பதவி விலகவேண்டும் என்ற குரல் எழுந்துள்ள இந்த நேரத்தில் அவரிடமேயே சகல அதிகாரங்களும் இருக்க முடியாது. எனவே பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமித்த பின்னர் உடனடியாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.