;
Athirady Tamil News

கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் மீட்பு

0

கற்பிட்டி கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (29.10.2023) இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரின் விசாரணை
கற்பிட்டி கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடைய இரண்டு கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட களைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் என்பன 22 உரைப் பைகளில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அது சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக மீன்பிடிக் கப்பலொன்றில் கொண்டு வரப்பட்டுள்ளமை சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் அதனை கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரப் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.