;
Athirady Tamil News

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

0

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது.

இருவரையும் ஜூன் 16-க்குள் ஆஜா்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்தத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் என 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இதை மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று தெரிவித்து, வங்கதேசத்தில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயத்தில் ஹசீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன.

அவரின் அரசுக்கு எதிராகப் போராடியவா்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை ஷேக் ஹசீனா சூழ்ச்சியுடன் திட்டமிட்டு, அறிவுறுத்தல்களை வழங்கியதாக தீா்ப்பாயத்தில் அரசுத் தரப்பு ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டிய நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, ஷேக் ஹசீனா மற்றும் அசதுஸ்ஸமான் கானுக்கு எதிராக தீா்ப்பாயம் கைது ஆணை பிறப்பித்தது. இருவரையும் ஜூன் 16-க்குள் ஆஜா்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.