;
Athirady Tamil News

மணலைச் சாப்பிடுகிறோம்! இரக்கம் காட்டுங்கள்! – காஸா சிறுவனின் கண்ணீர் விடியோ

0

காஸாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.

ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கி வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்தது. தற்போது குறிப்பிட்ட அளவு உணவு, மருந்துகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதிக்கும் நிலையில் அது அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதைவிட கொடூரமாக, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்களை இஸ்ரேல் படையினர் சுட்டுத் தள்ளுகின்றனர். இதில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர். காஸாவில் உணவின்றி மக்கள் தவித்து வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காஸாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஒரு சிறுவன், உணவு வேண்டும் என்று கதறும் ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கண்கலங்கச் செய்துள்ளதுடன் உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விடியோவில் சிறுவன் பேசுகையில்,

“காஸாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காஸாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

நாங்கள் உணவு இல்லாமல் மணலைச் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள். எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மணலைச் சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.

காஸாவில் தற்போது ஒரு ரொட்டி துண்டின் விலை 5.30 டாலர். அந்த ஒரு ரொட்டித் துண்டு மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை” என்று பேசியுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.