;
Athirady Tamil News

கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!! (படங்கள்)

0

‛இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பரவல், ஊரடங்கு தான் காரணம் எனவும், தாய்நாட்டுக்காக என்னால் முடிந்தவரை சேவை செய்தேன். வருங்காலத்தில் சேவை செய்வேன்” என அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கை 1948 ல் சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஆக்ரோஷமடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஆளும் அரசின் அமைச்சர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தனர். கடந்த 9 ம் தேதி மக்கள் நடத்திய போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறினார். மாலத்தீவு சென்ற அவர் தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்.

கோத்தபய ராஜினாமா

இதையடுத்து கடந்த 14ம் தேதி அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்த்தனேவுக்கு அனுப்பி வைத்தார். இதை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கையில் புதிய அதிபர் தேர்வு ஜூலை 20ல் நடைபெற உள்ள நிலையில் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே வயது 73, நேற்று பதவியேற்றார்.

ராஜினாமா கடிதம் வாசிப்பு

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமை வகித்தார். இதில் கேத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டது. அதில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா, ஊரடங்கு ஆகியவற்றை குற்றம்சாட்டி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க சிறந்த நடவடிக்கை எடுத்ததாகவும், தாய்நாட்டுக்காக முடிந்தவரை சேவை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு

இதுதொடர்பாக கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளதாவது: இலங்கையின் அதிபராக நான் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடியிலும் கூட பொதுமக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்தேன். 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நாட்டில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். இது பொருளாதார நிலையை சிக்கலுக்கு உள்ளாக்கியது.

சிறந்த நடவடிக்கை எடுத்தேன்

மேலும் அந்நிய செலாவணி நிலைமை மோசமடைந்தது. மேலும் நிலைமையை சரிசெய்யும் நோக்கத்தில் அனைத்துக் கட்சியின் அரசை நிறுவி சிறந்த நடவடிக்கை எடுத்தேன். கட்சி தலைவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஜூலை 9 ஆம் தேதி ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். ஜூலை 14 முதல் நான் ராஜினாமா செய்கிறேன். நான் எனது தாய்நாட்டிற்கு என்னால் இயன்றவரை சேவை செய்தேன். எதிர்காலத்திலும் அதை தொடர்ந்து செய்வேன்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதன்பிறகு இலங்கை நாடாளுமன்றம் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, ஜூலை 20ல் புதிய அதிபருக்கான தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ,முன்னாள் அமைச்சர்கள் அநுரயாப்பா அபேவர்தன, முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.