புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம்!!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று(21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.
பாராளுமன்றத்தில் நேற்று(20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த ஜனாதிபதி பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.