;
Athirady Tamil News

பூஜ்ஜியம் டூ ராஜ்ஜியம்.. எதிர்ப்பாளர்களை வைத்தே இலங்கையை பிடித்த ரணில்! அணில்களாக உதவியது யார்?

0

இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஒரே எம்பி மட்டுமே அவரது கட்சிக்கு இருந்த நிலையில், அவர் வெற்றி பெற்றது எப்படி அவர் கடந்து வந்த பாதை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடைபட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி காரணமாக, ராஜபக்ச சகோதரர்கள் நாட்டி விட்டு தப்பி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே

இந்நிலையில், இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 15ஆம் தேதி தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்று கொண்ட நிலையில் இன்று தேர்தலை சந்தித்தார். அதில் அவரது கட்சி சார்பில் ஒரே ஒரு எம்பியாக மட்டுமே இருந்தாலும் பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபயாராய் இருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவர் பதவியில் தொடர்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டு வந்த கதை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான 73 வயது ரணில் விக்ரமசிங்க, 1993 முதல் 1994 வரையிலும், 2001 முதல் 2004 வரையிலும், 2015 முதல் 2018 வரையிலும் இலங்கையின் பிரதமராக இருந்துள்ளார். 2018 ல் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து 2 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றார். 2019 ல் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிபர் வேட்பாளர் தோல்வியடைந்ததையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

பெரும்பான்மை ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே ஒரு எம்பியாக இருந்து கொண்டு அவர் அதிபரானாது அவ்வளவு எளிதல்ல. மக்களால் துரத்தப்பட்ட அவரது கட்சிக்கு தற்போது யார் யார் கடந்த காலங்களில் எதிர்ப்பாக இருந்தார்களோ தற்போது அவர்களை ஆதரவாய் இருக்கின்றனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழ் அமைப்பு

இந்த கட்சிகள் எல்லாம் கடந்த காலங்களில் அவரை கடுமையாய் விமர்சித்தவை என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக ஈழத் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சில தலைவர்கள் விக்கிரமசிங்கவுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரணில் அதிபராவது அவசியம் எனவும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளுடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ள அவர் இலங்கையை மீண்டும் கட்டெழுத்துவார் என கூறுகின்றனர். ரணில் அதிபராகப் பதவியேற்ற உடனே இலங்கையில் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.