இலங்கை நெருக்கடி: “கடனில்லாத நாடு வேண்டும்” – 100வது நாள் போராட்டத்தில் மக்கள்!! (படங்கள்)
இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம், இன்றுடன் 100 நாட்களை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய, பிறகு தமது பதவியில் இருந்து விலகி, புதிய அரசு அமைய வழியேற்படுத்தியிருக்கிறார். நூறாவது நாளாக தொடர்ந்து நடக்கும் தங்களுடைய போராட்டத்தை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே காரணம் என்று கூறி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியன்று கொழும்பு – காலி முகத்திடலில் பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் ஆரம்பம் முதலே வலுவாக இருந்தது. இந்த நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு, ரணில் நாட்டின் பிரதமரானதும் மக்கள் போராட்டம் சற்றே தணிந்து காணப்பட்டது. ஆனால், வலுவிழக்கவில்லை.
இந்த நிலையில், நாட்டில் எரிவாயு விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை போன்வை ஏற்றத்துடனேயே இருந்ததால் மக்களின் கோபம் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தினர், மக்கள் போராட்டம் மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர்.
முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த மக்கள், அதற்குள்ளாகவும் செல்ல முற்பட்டபோது, அவர்களை நோக்கி போலீஸார் தொடர்ச்சியாக கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகங்களை நடத்தி கட்டத்தைக் கலைக்க படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
எனினும், அதிகரித்து வந்த மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப்படையினர் தோல்வி அடைந்தனர். இதையடுத்து ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் இல்லத்தை கடந்த 9ஆம் தேதி போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
இலங்கை வரலாற்றிலேயே மக்கள் இப்படி போராட்ட உணர்வை வெளிப்படுத்துவது அசாதாரணமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி நாட்டை விட்டு தப்பிச் சென்ற அவர், முதலாவதாக மாலத்தீவுக்கும் அதற்கு மறுநாள் சிங்கப்பூருக்கும் சென்றார். இதேவேளை, தாம் வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக கோட்டாபய அறிவித்தார்.
இதன் பின்னர், சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதர் மூலம் தமது பதவி விலகல் கடிதத்தை ஜூலை 14ஆம் தேதி அனுப்பி வைத்தார் கோட்டாபய.
அவரது கடிதத்தை உரிய பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜூலை 15ஆம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து இலங்கையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி புதிய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு முறைப்படி நடைபெறவுள்ளது.
இது ஒருபுறமிருக்க, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியபோதும் அந்த செயல்பாடு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவில்லை. கோட்டாபய, மஹிந்த குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக ரணில் விக்ரமசிங்க கருதப்படுவதால், அவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே இந்த மக்கள் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது.