பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !!

சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 38வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவதன் மூலம் பதவி விலக முடியும்.
இதையடுத்து ‘கோட்டா வீட்டுக்குப் போ’ (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்திவந்தவர்கள் தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டாபாய, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது.