;
Athirady Tamil News

இலங்கையில் இடைவிடாத தொடர் போராட்டம்- கொழும்பில் இந்திய விசா மைய இயக்குநர் மீது கொடூர தாக்குதல்!

0

இலங்கை தலைநகர் கொழும்பில் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களின் போது கொழும்பில் உள்ள இந்திய விசா மைய இயக்குநர் விவேக் வர்மா கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபாய ராஜபக்சே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து தற்காலிக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவே தற்காலிக ஜனாதிபதியாகவும் இருந்து வருகிறார். நாட்டில் அவசர நிலையையும் ரணில் விக்கிரமசிங்க அமல்படுத்தி உள்ளார்

இந்நிலையில் இன்று இலங்கையில் புதிய தற்காலிக ஜனாதிபதி தேர்வு நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். தற்போதைய நிலையில் ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசநாயக்க களத்தில் உள்ளனர்.

இதனிடையே கொழும்பில் நேற்று போராட்டக்காரர்களால் இந்திய விசா மைய இயக்குநர் விவேக் வர்மா தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: கொழும்பிற்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இந்தியபிரஜையும் இந்திய விசா நிலைய பணிப்பாளருமான திரு.விவேக் வர்மா அவர்களை இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் இன்று காலை சந்தித்தனர்.இச்சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்திய இலங்கை மக்களிடையிலான உறவு அன்பும் நட்பும் நிறைந்தது. இலங்கையிலுள்ள இந்திய பிரஜைகள் அண்மைய நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ள அதேவேளை தமது நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை திட்டமிடுமாறும் கோரப்படுகினறனர். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எம்மை தொடர்புகொள்ளமுடியும். இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.